பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி தொடக்கம்

பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி தொடக்கம்

ராமேஸ்வரம்: புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி... ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.

கடந்த 1914-ம் ஆண்டு பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்ட ரெயில் பாலத்தின் வழியாக 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடந்து வருகிறது.

இதில் உள்ள தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 83 நாட்களாக ரெயில்கள் இந்த பாலத்தில் செல்லவில்லை.

கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வும் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் இன்று பூமி பூஜையுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சித் பில்டர்ஸ் என்ற நிறுவனம் பாலம் கட்டும் பணியை மேற்கொள்கிறது.

பழைய பாலம் போன்றே கப்பல்கள் வந்தால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பாலத்தின் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.