அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் – திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு

அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் – திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதல் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசேஷ மற்றும் சிறப்புத் தரிசனங்களுக்காகப் பக்தர்களிடம் அர்ச்சகர்களும், ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்புகார்களின் உண்மைத்தன்மையை அறிய, இன்று அதிகாலை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் அதிகாரிகள் யாருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், தனது காரைக் கோயில் வளாகத்திற்கு வெளியே தூர நிறுத்தினார். பின்னர், சாதாரண டி-சர்ட் மற்றும் முகமூடி அணிந்து, தனது உதவியாளருடன் ஒரு சாதாரண பக்தரைப் போலக் கோயிலுக்குள் சென்றார்.

அங்கு விரைவாகச் சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்குமாறு தன் உதவியாளரை அர்ச்சகர்களிடம் அனுப்பினார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல், “தலைக்கு தலா ரூ. 1,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தம் ரூ.4,000 கொடுத்தால் உடனே விஐபி (VIP) தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறோம்” என்று அங்குள்ள அர்ச்சகர்கள் பேரம் பேசியுள்ளனர்.

தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் கூகுள் பே (G-Pay) எண்ணிற்கு ரூ. 4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார். பணம் கணக்கில் ஏறியதை அர்ச்சகர்கள் உறுதி செய்த அடுத்த கணமே, தனது முகமூடியைக் கழற்றித் தான் யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்துடன் அர்ச்சகர்களையும், அதற்குத் துணையாக இருந்த ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னிப்புக் கடிதம்; தொடரும் விசாரணை

இந்த ஊழல் அராஜகத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களைக் கோயில் அலுவலகத்திற்கு வரவழைத்த அமைச்சர், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், மாதாந்திர வருவாய் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தற்போது தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த விரிவான ஆய்வுப் பணிகள் நிறைவடைய நாளை பிற்பகல் ஆகும் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் பல காலமாக நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து, துறைச் செயலாளருடன் அமைச்சர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.