செப்டம்பர் 11 ஆம் தேதி தேசிய அளவிலான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
வங்கிகளுக்கான 5 நாள் வேலை வாரக் கோரிக்கையை வலியுறுத்தி வங்கியாளர்கள் கூட்டமைப்பான UFBU வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில, “ஏற்கெனவே டிஜிட்டல் வங்கிச் சேவைகளால் வாடிக்கையாளர் தொடர்பை இழந்துவிட்ட சூழலில், வாரம் 7 நாட்களும் வங்கிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற முற்றிலும் எதிரான கோரிக்கையை வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் அமைப்பினர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் சர்வதேச நடைமுறைகளுக்காகவும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் வேளையில், நேரில் சென்று கடன் விண்ணப்பங்கள் அளித்தல், காசோலை பரிவர்த்தனைகள், லாக்கர் வசதிகள் மற்றும் சிக்கலான நிதிச் சேவைகளுக்கு வார இறுதி நாட்களே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இணையவழிச் சேவைகள் ஓரளவுக்கு உதவினாலும், நேரடிச் சேவைகளுக்கான தேவை குறையாததால், சுழற்சி முறையில் (Shift System) ஊழியர்களை நியமித்து அனைத்து நாட்களும் வங்கிகளைச் செயல்பட வைப்பதே பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.