கவியரசர் கண்ணதாசனுக்கு அருளரசர் வாரியார் சுவாமிகளின் வாழ்த்து!
வாரியார் சுவாமிகளின் வாழ்த்து
“தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று அப்பர் பெருமான் அருள செய்தார். இந்த அமுத வாக்குக்கு முற்றிலும் உரியவர் அன்புச் செம்மல் திரு. கண்ணதாசன் அவர்கள்.
திரு.கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் படிப்போர் உள்ளத்தை பரவசம் ஆக்குகின்றன. அதில் தெள்ளு தமிழ் துள்ளுகின்றது. இனிமைத்தேன் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகின்றது. பொருள் நயம் களிநடம் புரிகின்றது.
கண்ணதாசன் வாக்கில் தமிழ் மேகங் குடி கொண்டிருக்கின்றது. நினைத்த மாத்திரத்தில் அமுதம் போல் அரிய பாடல் மழை பொழிகின்றது.
பாட்டில் இனிமை இருக்கின்றது. அழகு இருக்கின்றது. எளிமையிருக்கின்றது. இவைகளுக்கு மேலே பாட்டில் உயிரோட்டம் இருக்கின்றது.
இவர் ஒரு இயற்கை கவி. குழந்தை உள்ளம் படைத்தவர். இவர் உள்ளத்தில் சூதுவாதுகள் இல்லை. ஆனால் இவருடைய உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வரும் பாடல்கள் பளிங்கு போல் ஒளி செய்கின்றன. பண்ணுற்ற பைந்தமிழில் எண்ணற்ற பாடல்கள் அநாயாசமாக பாடியுள்ளார்.
“எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளை
சித்திக்கும் வித்தாககச் செப்புகின்றான் - சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து”
கவியரசர் கண்ணதாசனுக்கு, அருளரசர் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
வழங்கிய வாழ்த்து.....
கவிஞருக்கு கிடைத்த பெரும் பேறு ..!
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் இன்று.