தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு.. டிஐஜி விஜயகுமார் அகால மரணம்.. ஸ்டாலின் உருக்கம்!

 தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு.. டிஐஜி விஜயகுமார் அகால மரணம்.. ஸ்டாலின் உருக்கம்!
தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு.. டிஐஜி விஜயகுமார் அகால மரணம்.. ஸ்டாலின் உருக்கம்!

கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்தார். காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார் விஜயகுமார்.

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் தான் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார் விஜயகுமார். இவர் இன்று காலை 6.50 மணிக்கு திடீரென முகாம் அலுவலகத்தில் இருந்த பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டிஐஜி விஜயகுமாரின் உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபெற அவர் சிகிச்சையிலும் இருந்துள்ளார். மேலும் மன அழுத்ததால் பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு உயர் அதிகாரிகளும் கவுன்சிலிங் வழங்கியுள்ளார். மன அழுத்தம் காரணமாக விடுப்பிலும் இருந்துள்ளார் விஜயகுமார்.

இந்நிலையில் விஜயகுமார் திடீரென இன்று அதிகாலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டு மொத்த காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர்.

அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.