என்.டி.ஏ கூட்டணியில் த.வெ.க இணையுமா ? – செங்கோட்டையன் விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் அறிவிப்பிற்கான ஏற்பாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடையும் நிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தவெக இணையும் என்ற பேச்சு நீடித்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
பாஜக தலைவர்கள் மூலம் விஜய்யிடம் கூட்டணிக்கான மூவ் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் என மும்முனை போட்டிக்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என மாவட்ட செயலாளர்களிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து கேட்டுள்ளார். அதில் பெரும்பாலான நிர்வாகிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு நேற்று சென்றிருந்தார். சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுக்க பாஜக முயற்சி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தவெகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவே இல்லை என்று ஒரேடியாக அவர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என அக்கட்சியின் நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேருவதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.




