டி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர் மலிங்கா தான்!

டி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர் மலிங்கா தான்!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.

நியூசிலாந்து அணியில் கொலின் முன்ரோ, திம் செய்ஃபெர்ட் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய மலிங்கா 3 ரன்கள் கொடுத்தார். முன்ரோ இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். இரண்டு ஓவரில் அந்த அணி 15 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முன்ரோவை கிளீன் போல்ட் ஆக்கினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது நூறாவது விக்கெட். அடுத்த மூன்று பந்துகளில் ருதர்போர்டு, கிரான்ஹோம், டெய்லர் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார்.

இதன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். மீண்டும் ஐந்தாவது ஓவரில் செய்ஃபெர்ட்டையும் ஆட்டமிழக்க செய்தார். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். நியூசிலாந்து அணி 88 ரன்களில் ஆட்டமிழந்தது.

3-வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கொலின் முன்றோ க்ளீன் போல்டானார். இந்த விக்கெட் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லஷித் மலிங்கா இதற்கு முன்பாக, 2007 உலகக் கோப்பை தொடரின் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்திருந்தார். ஆப்கான் வீரர் ரஷித் கானும் டி20 போட்டியில் ஒருமுறை நான்கு பந்துகளில் 4 விக்கெட் எடுத்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் மலிங்கா இதுவரை 5 முறை ஹாட்ரிக் விக்கெட் சாய்த்துள்ளார்.