நிதி உதவியைவிட நீதி வேண்டும் இவ்வாறு மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

நிதி உதவியைவிட நீதி வேண்டும் இவ்வாறு மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.  

இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். 

அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. 

நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? 

அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்? 

எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்? 

அந்த உண்மைகளை ஆராயாமல், பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா? 

அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா? 

இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். 

ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர்,கடந்து விடக் கூடாது. 

நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. 

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள், அதற்குத் துணை நின்றவர்கள், கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இதை மறைக்க முயன்றவர்கள் என பலருக்கு இந்த கொலையில் பங்குண்டு. 

இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது? 

இவை அனைத்திற்கும் மேலாக காவல்துறையின் கொலைகளை, கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அரசும் அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது. 

இப்போது அதே காவல் துறையின் கரங்கள் இரண்டு உயிர்களைக் குடித்து விட்டு வந்து நிற்கிறது. 

அரசு தன் விசுவாசமான கரத்தைக் காக்கும் செயலை செய்யப் போகிறதா? 

அல்லது 

சரியானதைச் செய்ய போகிறதா? 

காவல் துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, உயிரிழப்புகளின் போது பெயரளவில் நடவடிக்கை எடுத்து அமைதி காக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை, அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருகிறது. 

மக்களாட்சி என்பதை மறந்து அதிகாரத்தை, ஆதிக்கத்தை, அநீதியை மக்கள் மேல் இந்த அரசு தொடர்ந்து கட்டவிழ்க்கிறது. 

மக்களின் உயிரை, உணர்வை, உரிமைகளை, சட்டத்தை மதிக்காத அரசு அகற்றப்பட வேண்டும். 

சட்டம் மக்களுக்கானது, மக்களைக் காப்பதற்கு எனும் போது, நீதித்துறை மக்களுடன் நிற்க வேண்டும். 

தன் கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர், கொரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார். 

எத்தனை முறை நாம் எதிர்த்தாலும், தன் விருப்பத்திற்கு செயல்பட்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மக்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடும் இந்த அடிமை அரசின் ஆணவத்தை, ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் நம் குரல் அசைத்து பார்க்கட்டும். 

எந்த தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவிகளின் உயிர் போல், இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாதிருக்க இதைச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்.