திருச்செந்தூர் கோவிலில் இன்று முதல் கைபேசி பயன்பாட்டுக்கு தடை!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கைபேசி பயன்பாட்டுக்கு தடை! – இன்று முதல் அமலுக்கு வருகிறது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் நோக்கில், இன்று (ஜூலை 1) முதல் கைபேசி பயன்பாட்டுத் தடை விதிமுறைகள் கூடுதல் தீவிரத்துடன் அமல்படுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொது தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் தங்கள் கைபேசிகளைத் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் பல இடங்களில் கைபேசி வைப்பிடங்களை (Mobile Deposit Counters) அமைத்துள்ளது. சோதனையின்போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பறிமுதல் செய்யப்பட்டு வைப்பகங்களில் வைக்கப்படும் என்பதால், நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.