புதிய மும்மொழித் திட்டத்தில் தளர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பு

புதிய மும்மொழித் திட்டத்தில் தளர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பு

புதிய மும்மொழித் திட்டத்தில் தளர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி!

தற்போது 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய மும்மொழித் திட்ட விதிகள் பொருந்தாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது மூன்றாவது மொழிக்குத் தனியாகப் பொதுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழித் திட்டம் அமலுக்கு வரும் என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், 6-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் அதே மூன்றாவது மொழியே 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் விருப்பப் பாடமாகத் தொடரும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கடந்த மே 15-ஆம் தேதி வெளியான சுற்றறிக்கையில், ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

புதிய தளர்வுகள் மற்றும் விளக்கங்கள்:

இந்தத் திடீர் விதிமுறைகளால் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிபிஎஸ்இ தற்போதைய புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

தற்போது 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய மும்மொழித் திட்ட விதிகள் பொருந்தாது; அவர்கள் பழைய நடைமுறையிலேயே கல்வியைத் தொடரலாம்.

தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள், 10-ஆம் வகுப்புக்குச் செல்லும்போது மூன்றாவது மொழிக்குப் பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை.

இருப்பினும், 9-ஆம் வகுப்பில் இருந்து மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்ற விதி தொடரும். அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள், மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கூடுதல் இந்திய மொழிக்குப் பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு முறை மட்டுமே பின்பற்றப்படும்.

இந்த இடைக்கால தளர்வு தற்போதைய 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ள சிபிஎஸ்இ நிர்வாகம், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்பத் தேவையான பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.