கராத்தே லிட்டில் மாஸ்டர்ஸ்

கராத்தே லிட்டில் மாஸ்டர்ஸ்
கராத்தே லிட்டில் மாஸ்டர்ஸ்
கராத்தே லிட்டில் மாஸ்டர்ஸ்

கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகளுக்கு, காரைக்காலைச் சேர்ந்த குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும்10 வயது இரட்டையர்கள் வீடியோக்கள் மூலம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கிறார்கள். யார் இவர்கள்?, வீடியோ மூலம் தற்காப்பு பயிற்சி அளிப்பதன் நோக்கம் என்ன?, போன்ற கேள்விகளோடு, அவர்களை தொடர்பு கொண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு மழலை மொழியில் பதிலளித்தார்கள்.
''நானும், என் தங்கை ஸ்ரீ ஹரிணியும் இரட்டையர்கள். 3 வயதில் இருந்தே தற்காப்பு கலையை ஆர்வமாக பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் 9 வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு ‘பிளாக் பெல்ட்’ வென்ற இரட்டையர்கள் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறோம். பெற்றோரின் அரவணைப்பும், காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர்  மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும் தற்காப்பு கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது. மாநில, தேசிய அளவில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று,, பல பட்டங்களை வென்றிருக்கிறோம். வரவிருக்கும் போட்டிகளுக்காகவும் தயாராகி வருகிறோம்" என தன்னை பற்றியும், தன் தங்கை பற்றியும் பொறுப்பாக அறிமுகப்படுத்தி கொண்டார், ஸ்ரீ விசாகன். அவரை தொடர்ந்து ஸ்ரீ ஹரிணி பேசினார்.
''தற்காப்பு பயிற்சியும், தற்காப்பு போட்டிகளும்தான் எங்களை உற்சாகமாக இயங்க செய்கிறது. நினைவு தெரிந்த வயதில் இருந்தே தற்காப்பு கலை எங்களோடு வளர்ந்து வருகிறது. கராத்தே, குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வால், வால் பயிற்சி, நுங்சாக்... என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை பயின்றிருக்கிறோம். இதில் பெரும்பாலான கலைகளில், பல பரிசுகளையும் வென்றிருக்கிறோம்."
என்றார்.
வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் சாதனை இரட்டையர்களிடம், தற்காப்பு பயிற்சி வீடியோக்களின் அவசியம் பற்றி கேட்டோம். அதற்கு அவர்கள் பதிலளித்தனர்.
''கொரோனா ஊரடங்கு சில பெரியவர்களையும், குழந்தைகளையும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து சமைக்கிறார்கள். சிலர் படிக்கிறார்கள். பலவிஷயங்களை பழகுகிறார்கள். அந்தவகையில் தற்காப்பு கலைகள் பழகும் ஆசை இருக்கும் குழந்தைகளுக்கு உதவியாகவே, தாற்காப்பு பயிற்சி வீடியோக்களை உருவாக்கினோம். நானும், தங்கையும் கராத்தே, குங்பூ, சிலம்பம் பயிற்சிகளை மேற்கொள்ள, தந்தை முருகானந்தம் வீடியோவாக பதிவு செய்கிறார். அது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், யூ-டியூப் வழியாக பரவ தொடங்கி, இன்று எங்களது பயிற்சி வீடியோக்களின் மூலம் பல குழந்தைகள் கராத்தே பயிற்சி பெறுகிறார்கள். நாங்களும் புதுமையான பயிற்சி வீடியோக்களை உருவாக்கி, www.karatetwins.com என்ற இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்" என்றார்கள்.
தற்காப்பு கலையில் பட்டைய கிளப்பும் இரட்டையர்கள், பள்ளி படிப்பிலும் அசத்துகிறார்கள். தற்காப்பு பயிற்சிகள் ஒருபக்கம், வீடியோ தயாரிப்பு மறுபக்கம் என பிசியாக இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகளிலும் ஆர்வமாக படிக்கிறார்கள்.
இவர்கள் தற்காப்பு கலைகள் மட்டுமின்றி, பாரம்பரிய விளையாட்டுகள் சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். இதுபற்றி இரட்டையர்களின் தந்தை முருகானந்தம் கூறுகிறார்.
''பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பரிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புள்... என பல பாரம்பரிய விளையாட்டுகளின் நுட்பங்களை அவர்கள் பாட்டியிடமிருந்து கேட்டறிந்தார்கள். பிரபலமில்லாத பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதனால், பாரம்பரிய விளையாட்டுகளை வீடியோவாக மாற்றி, அதை பதிவேற்றும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். பிள்ளைகளை விளையாட்டு துறையில் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் என் ஆசை. அதற்கான பாதையில் நடக்க ஆரம்பித்திருக்கிறோம். தற்காப்பு பயிற்சி திட்டமிடுதலை நான் பார்த்து கொள்கிறேன். படிப்பு சம்பந்தமான விஷயங்களை என் மனைவி பிரியா கவனித்து கொள்கிறார்." என்று மனநிறைவாக முடித்தார்.கராத்தே லிட்டில் மாஸ்டர்ஸ் .