தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி: கமல்ஹாசன்

தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி: கமல்ஹாசன்

சென்னை: பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறயதாவது:

"வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.

நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தான், நான் மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படித்தான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும். 

நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு  நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு. 

14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி." 

இவ்வாறு அவர் கூறினார்.