மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: ஆதித்ய தாக்கரேவுக்கு இடம்; துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: ஆதித்ய தாக்கரேவுக்கு இடம்; துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் திடீர் அதிர்ச்சியாக முதல் முறையாக தேர்தலில் நின்று வென்ற ஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு அளித்து தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து துணை முதல்வராகப் பதவி ஏற்ற என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கும் அமைச்சர் பதவியில் இடம் அளிக்கப்பட்டது. துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.

சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அவருடன் காங்கிரஸ், என்சிபி கட்சி சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத், ஏக்நாத் ஷின்டே, சுபாஷ் தேசாய், ஜெயந்த் பாட்டீல், சாஹன் பூஜ்பால் ஆகியோர் மட்டுமே கேபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பின், மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இன்று எளிமையான முறையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் மிகவும் வியப்புக்குரிய வகையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்யா தாக்கரேவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக நேரடி அரசியல் களத்துக்குள் வந்த ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.